கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த 29ஆம் தேதி எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் விவாதித்தனர்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனிடையே, கர்நாடக சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட பாஜக எம்.எல்.ஏ விஸ்வேஸ்வர் ஹெக்டே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.