இயற்கையின் மீதான பக்தி மக்களிடம் குறைந்து வருவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று உத்தரப் பிரதேச மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண சௌத்ரி பேசினார்.
மதுரையில் நடைபெற்று வரும் வைகைப் பெருவிழா 2019-இன் சிறப்பு மலர் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேச மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் லட்சுமி நாராயண சௌத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழா மலரை வெளியிட்டு பேசியது:
நமது முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டு வந்தனர். இதனால் அப்போது இயற்கை அழிவில்லாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் நதிகள், ஆறுகள், குளங்களையும் தெய்வத்தினஅம்சங்களாக மதித்து வந்ததால் அவற்றை அசுத்தப்படுத்தவும் தயங்கினர். மரங்களை தெய்வத்தின் வடிவமாக பார்த்ததால் மரங்களை வெட்டத் தயங்கினர். ஆனால், தற்போது இயற்கை மீதான பக்தி மக்களிடம் குறைந்து வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. நதிகள், ஆறுகள் மாசுப்படுத்தப்படுகின்றன. இது இயற்கைக்கு நாம் செய்யும் தீங்காகும். இயற்கை என்பது கடவுளின் படைப்பாகும். இயற்கை நிந்திப்பது கடவுளை நிந்திப்பதாகும்.
தமிழகம் ஆன்மிக பூமி. எப்போதும் ஆன்மிகத்துக்கு ஆதரவளிக்கும் பூமி. எனவே இயற்கையை பாழ்படுத்துவது, நதிகளை அசுத்தப்படுத்துவதை தடுக்க மக்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.