எந்த மாநிலத்திலும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக மத்திய அரசு குழு நியமித்துள்ளது. இந்தக் குழுவானது, ஹிந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியைப் படிக்க வேண்டும் என்று வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
இது ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை திணிக்கும் செயல் என்று தமிழகத்தில் உள்ள தலைவர்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டும், ஹிந்தி திணிப்பு தமிழகம் எதிர்ப்பு போன்ற ஹேஷ்டேக்குகளும் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது.
இந்த நிலையில், எந்த மாநிலத்திலும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய மனித வள மேபாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில்,
"புதிய கல்விக் கொள்கைக்கான வரைவைத்தான் இந்தக் குழு மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அது கொள்கை முடிவல்ல. மும்மொழிக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். அது கொள்கை முடிவு என்று புரிந்துகொண்டிருப்பது தவறாகும். எந்த மாநிலத்திலும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது" என்றார்.
அவருக்கு முன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவிக்கையில்,
"யார் மீதும் எந்த மொழியும் திணிக்கும் எண்ணம் கிடையாது. அனைத்து இந்திய மொழிகளையும் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். இது குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கை தான். பொது மக்களிடம் கருத்துக் கேட்ட பிறகு அரசு தான் இதுகுறித்து முடிவு எடுக்கும்" என்றார்.