ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் இன்று பதிவான வெப்பத்தின் அளவு 49.6 டிகிரி செல்சியஸ் (121.28 ஃபாரன்ஹீட்) என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
மேலும், இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை குறித்த புள்ளி விவரங்களை தொகுத்து அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் எப்போதெல்லாம் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு உயர்ந்தது என்பதை பார்க்கலாம்.
1. பலோதி, ராஜஸ்தான் 51.0 டிகிரி செல்சியஸ் - 19, மே - 2019 (இதுதான் இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பம்)
2. ஆல்வார் - ராஜஸ்தான் 50.6 டிகிரி செல்சியஸ் - 10, மே - 1956
3. பலோதி, ராஜஸ்தான் - 50.5 டிகிரி செல்சியஸ் - 18, மே 2016
4. சுரு, ராஜஸ்தான் - 50.2 டிகிரி செல்சியஸ் - - 19, மே - 2016
5. திட்லகார், ஒடிஸா - 50.1 டிகிரி செல்சியஸ் - 5, ஜூன் 2003
6. கங்காநகர், ராஜஸ்தான் - 50.0 டிகிரி செல்சியஸ் - 14, ஜூன் 1934
7. தோல்புர், ராஜஸ்தான் - 50.0 டிகிரி செல்சியஸ் - 3, ஜூன் 1995
8. பலோதி, ராஜஸ்தான் - 50 டிகிரி செல்சியஸ் - 20, மே - 2016
(இந்த பட்டியலின் மூலம் இந்தியாவின் உலைக்களமாக ராஜஸ்தான் விளங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின் உலைக்களமாக திருத்தணி தற்போது உள்ளது.)
சரி இந்தியாவில் அதிகம் பதிவான வெப்ப அளவை பார்த்துவிட்டோம். தமிழகத்தின் உலைக்களமான திருத்தணியில் கடந்த 2003ம் ஆண்டு மே 29ம் தேதி 48.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக இதுவரை உள்ளது. அப்போது, கடலில் உருவான புயல் சின்னம் பர்மா நோக்கி நகர்ந்ததால் காற்றில் இருந்த ஈரப்பதம் முழுவதையும் இழுத்துச் சென்றதால் வெப்பநிலை அதிகரித்தது.
அதே ஆண்டு சென்னையில் 2003 மே 31ம் தேதி வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவானது. இதுதான் கடந்த 200 ஆண்டுகளில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பமாகும்.
தென்மேற்கு பருவ மழை ஜூன் 2வது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் அளவிலேயே வெப்பம் இருக்கும்.
தாமதமாகத் தொடங்கினாலும், ஜூன் மாதம் கேரளா மற்றும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.