வயநாடு விவசாயி தற்கொலை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதில் கடிதம்
வயநாட்டைச் சேர்ந்த வி.டி. தினேஷ் குமார் (53) என்ற அந்த விவசாயி 3 வங்கிகளில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நெருக்கடி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸார் கடந்த மாதம் 25-ஆம் தேதி கூறியிருந்தனர்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு மாநில முதல்வர் பினராயி விஜயனை, காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயி தற்கொலையின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், நிதியுதவி அளிப்பது தொடர்பாகவும் ஆய்வறிக்கையை சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.