அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராவதை தவிர்த்தார் வதேரா

கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராவதை ராபர்ட்
அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராவதை தவிர்த்தார் வதேரா

கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராவதை ராபர்ட் வதேரா தவிர்த்துவிட்டார். உடல்நிலை சரியில்லாததால் நேரில் ஆஜராகவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு வியாழக்கிழமை அவர் நேரில் ஆஜரானார். இரண்டாவது நாள் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அடுத்த வாரத்தில் அவர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை வலியுறுத்தும் என்று தெரிகிறது.
முன்னதாக,  பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது.
லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜரானார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேராவை அவரது மனைவியும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காரில் நேரில் வந்து விட்டுச் சென்றார்.
அமலாக்கத்துறை முன்பு தொடர்ந்து நேரில் ஆஜராகிவருவது குறித்து வதேரா சுட்டுரையில் (டுவிட்டர்) அதிருப்தி தெரிவித்திருந்தார். அதில், இந்திய நீதித்துறை மீது எனக்கு தொடர்ந்து நம்பிக்கை உள்ளது. அதனால் அனைத்து விசாரணை அமைப்புகள் அனுப்பும் சம்மன்களுக்கும் மதிப்பளிப்பேன். ஏற்கெனவே 11 முறை நேரில் ஆஜராகியுள்ளேன். என்னிடம் சுமார் 70 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் எனது ஒத்துழைப்பை அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும்வரை, எனது ஒத்துழைப்பை வழங்குவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது. இதை எதிர்த்து  தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து, முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் அமலாக்கத் துறை மனு குறித்து பதிலளிக்க ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல அனுமதிகோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான உத்தரவை ஜுன் 3ஆம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com