அமெரிக்காவில் கால் சென்டர் நடத்தி மோசடி செய்த வழக்கில் இந்தியர் ஒருவருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் சர்வில் பாட்டீல். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் அமெரிக்காவில் உள்ள சில மோசடியாளர்களுடன் இணைந்து கால் சென்டர் நடத்தியுள்ளார். அப்போது வருவாய்த் துறை அதிகாரிகள் என்ற பெயரில் போலியாக நடித்து அமெரிக்கர்களிடமிருந்து பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, பாட்டீலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரியில் அவர் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பண மோசடியில் ஈடுபட்ட பாட்டீலுக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கால் சென்டர் மோசடியில் ஈடுபட்டு சிறை தண்டனை பெறும் மூன்றாவது இந்தியர் பாட்டீல் ஆவார்.
முன்னதாக, இதே போன்றதொரு மோசடியில் ஈடுபட்டதற்காக கடந்த மார்ச் மாதத்தில், நிஷித் குமார் பாட்டீல் என்பவருக்கு எட்டு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டணையும், ஏப்ரலில் ஹேமல்குமார் ஷா என்பவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறை தண்டணையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.