புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீதான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரி திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா. இவர் மீது வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில் பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கினை அமலாக்கத்துறை சார்பாக ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜிவ் ஷர்மா விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் ராபர்ட் வதேரா மீதான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரி ராஜிவ் ஷர்மா திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக இந்திய வருவாய்த் துறைப் பிரிவு அதிகாரியான மகேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
ராஜிவ் ஷர்மாவுக்கு அவரது துறையில் நீண்டகாலமாக பணி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. துணை இயக்குநராக பணியில் சேர்ந்த அவருக்கு இணை இயக்குநராக உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு அவர் தனது சொந்த பணிப்பிரிவான காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.