லக்னௌ: உத்தரபிரதேச மாநில கிராமம் ஒன்றில் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறைகளில், தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்கள் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.,யில் புலந்தர்ஷா பகுதியில் மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் 508 கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதில் திபாய் தெஹ்சில் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 13 கழிவறைகளில் தமிழக அரசின் சின்னம், மகாத்மா காந்தி மற்றும் அசோக சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கிராம மக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சின்னம் பதித்த டைல்ஸ் கற்கள் அங்கே எப்படி சென்று சேர்ந்தன என்பது குறித்து இரு மாநில அரசுகளும் விரிவான விசாரணைநடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
முன்பாக 2018 ம் ஆண்டு ம.பி.,யில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டித்தரப்பட்ட மானிய விலை வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானின் படங்கள் பதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.