மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரங்களில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம், 35-ஏ மற்றும் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை உறுதியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை சிறப்புக் கூட்டம் நடத்தினார்.
அப்போது பயங்கரவாத மற்றும் மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கைகளை கடுமைப்படுத்தப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.