போபால்: மத்தியப் பிரதேசத்தில் சாலையில் செல்லும் லாரிகளுடன், காவல்துறையினர் பாதுகாப்புக்குச் செல்வதைக் காண முடிகிறது.
அது என்ன லாரி என்று கேட்கிறீர்களா? பணக் கட்டுகளுடன் செல்லும் லாரிகள் அல்ல, தண்ணீர் லாரிகள்.
ஜூன் மாதம் தொடங்கிவிட்டது. பருவ மழை இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. இது நாடு முழுவதும் பரவுவதற்குள் தண்ணீருக்காக போரே தொடங்கிவிடும் போல நிலைமை தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் சாலையில் செல்லும் தண்ணீர் லாரிகளுக்கு பாதுகாப்புக்காக காவல்துறையினரை உடன் செல்லுமாறு மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பல இடங்களில் குடிநீருக்காக போராட்டங்கள், தண்ணீர் லாரிகளை மடக்குவது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.