
கோவா விமான நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, விமான நிலையம் சில மணி நேரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமானச் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கடற்படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
கோவா விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக விமானம் புறப்பட்டபோது, அந்த விமானத்தின் வெளிப்புறத்தில் இருந்த எரிபொருள் டேங்க் கீழே விழுந்தது. அதில் இருந்து எரிபொருள் சிந்தியதில், ஓடுபாதையின் ஒரு பகுதியில் தீ பற்றியது.
இந்த விபத்து காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் சில மணி நேரங்களுக்கு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதையடுத்து விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த விபத்தால் விஸ்தாரா விமான நிறுவனத்தின் தில்லி மற்றும் மும்பைக்கு செல்லும் இரு பயணிகள் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
சில விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்று கூறினார்.
கோவா விமான நிலையம், பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் பயன்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.