
வாராக்கடனுக்கான புதிய வரையறை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கடன் மற்றும் நிதிச்சூழல் மேம்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
வாராக்கடனுக்கான முந்தைய வரையறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், அதற்கான புதிய வரையறையை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற வங்கிகள் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
ஒரு கடன் கணக்கை வாராக்கடனாக அடையாளப்படுத்தி அதற்கு தீர்வு கண்பதற்கான வழிமுறைகளைக் கையாள முன்பு 180 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அவகாசம் 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு நபரோ, நிறுவனமோ ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளிடம் கடன் பெற்றிருந்து, பின்னர் அந்த கடன் கணக்கு வாராக்கடனாக மாறும் பட்சத்தில், அதற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வங்கிகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேவையேற்படும் பட்சத்தில், ஒரு வாராக்கடன் கணக்குக்கு எதிராக திவால் நடவடிக்கையை தொடங்கும் அறிவுறுத்தலை ரிசர்வ் வங்கி வழங்கும். இதனால், வராக்கடனுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் எந்தவித சமரசமும் இருக்காது.
இதுபோன்ற நெறிமுறைகளுடன் கூடிய புதிய வரையறையால் நிதிச்சூழல் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நிதி அமைப்பானது நெகிழ்திறனும், உறுதித்தன்மையும் பொருந்தியதாக மாற நீண்டகாலம் ஆகும்.
திறம்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாத காரணத்தாலேயே வங்கியில் கடன் மோசடிகள் அதிகரித்துள்ளன. வங்கி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புடைமையையும் மேம்படுத்தும் வகையில் வரும் மாதங்களில் வங்கிகளில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று சக்திகாந்த தாஸ் பேசினார்.