ஏழுமலையான் சந்நிதியில் உள்ள போக சீனிவாசமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கலசாபிஷேகம் நடைபெற்றது.
கி.பி. 614-ஆம் ஆண்டில் ஆனி மாதம் பல்லவ ராணி சாமவாயி பெருந்தேவி ஏழுமலையான் கோயிலுக்கு 18 அங்குலம் உயரமுள்ள வெள்ளியிலான போக சீனிவாசமூர்த்தி விக்ரகத்தை வழங்கினார். இதுகுறித்த வரலாற்று சாசனம் ஏழுமலையான் கோயில் முதல் பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதை நினைவுகூரும் வகையில், பல்லவ அரசி விக்ரகத்தை அளித்த அந்த நாளில் போக சீனிவாசமூர்த்திக்கு தேவஸ்தானம் ஆண்டுதோறும் சிறப்பு சகஸ்ரகலசாபிஷேகத்தை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஏழுமலையான் கோயில் தங்கவாசல் அருகில் கருடாழ்வார் எதிரில் போக சீனிவாசமூர்த்திக்கு 1008 கலசநீரால் அர்ச்சகர்கள் அபிஷேகத்தை நடத்தினர்.
இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு காலை தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது. ஏழுமலையான் மூல மூர்த்திக்கும் போக சீனிவாசமூர்த்திக்கு அனுசந்தானம் செய்துள்ளனர். அதனால் அவருக்கு நடக்கும் அபிஷேகம் மூலவருக்கு நடத்தப்படுவதற்கு ஒப்பாகும். போக சீனிவாசமூர்த்தியை மணவாளப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.