உலகின் மிகப்பெரிய மருத்துவமனை: 5,462 படுக்கை வசதிகளுடன் வருகிறது விரைவில்
பாட்னா: திட்டமிட்டபடி எல்லாம் நல்லபடியாக நடந்தால் பாட்னாவில் உலகிலேயே மிகப் பெரிய மருத்துவமனை விரைவில் அமையும்.
500 படுக்கை வசதிகள் கொண்ட இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிகார் முதல்வர் நிதிஷ் குமார், 1700 படுக்கை வசதிகள் கொண்ட பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விரைவில் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டு 5,462 படுக்கை வசதிகள் கொண்டதாக இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய மருத்துவமனையாக உருவாகும் என்று அறிவித்தார்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இந்த மருத்துவமனை கட்ட ரூ.5,540 கோடி செலவாகும் திட்ட மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதிருக்கும் பழைய கட்டடத்தில் இருக்கும் நோயாளிகள் பத்திரமாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, பழைய கட்டடம் இடித்து, புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் கூறியபடி நடந்தால், புதிதாக உருவாகும் மருத்துவமனைதான் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்ற பெருமையைப் பெறும்.