புராதன நாணயங்களைக் கொண்டு நினைவுப்பரிசு தயாரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை
புராதன நாணயங்களைக் கொண்டு நினைவுப்பரிசு தயாரிக்க முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசின் தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியம் தெரிவித்தார்.
அவர் ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை காலை வி.ஐ.பி. தரிசனம் மூலம் தரிசித்தார். பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஏழுமலையானைத் தரிசிக்க வந்த பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்தனர். இதற்காக, தேவஸ்தானத்தின் கருவூலத்தில் இருக்கும் புராதன நாணயங்களைக் கொண்டு நினைவுப்பரிசைத் தயாரிக்க சிலர் முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
புராதன நாணயங்கள், தேவஸ்தானக் கருவூலத்தில் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஏழுமலையானின் சொத்தாகும். அவை அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மற்றும் மக்களால் வழங்கப்பட்டவை. அவற்றை எடுத்து நினைவுப் பரிசு தயாரிக்க முயன்றது குற்றம். இதைச் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவஸ்தான செயல் அதிகாரியாக நான் பணியாற்றியபோது தேவஸ்தான அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புராதன நாணயங்களை தேசிய அளவில் கண்காட்சி நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன் என்றார் அவர்.