அகமதாபாத்: அரபிக் கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் நாளை காலை கரையைக் கடக்கும் என்பதால், கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணி துவங்கியது.
சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களில் இருந்து சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
வாயு புயலானது அதி தீவிர புயலாக மாறி நாளை காலை வெரவால் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாயு புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.