மும்பை: அரபிக் கடலில் உருவான வாயு புயலானது குஜராத்தில் கரையைக் கடக்காமல், குஜராத் மாநிலத்தின் கடற்கரைப் பகுதியை ஒட்டியவாறு கடந்து செல்லும் வகையில் பாதை மாறியுள்ளது.
இன்று காலை குஜராத் மாநிலத்தில் வாயு புயல் கரையைக் கடக்கும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், வாயு புயல் கரையைக் கடக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கரையைக் கடக்காமல் போனாலும், குஜராத் மாநிலக் கடற்கரைப் பகுதியை வாயு புயல் கடந்து செல்லும் போது பலத்த காற்று வீசும் என்பதால், தொடர்ந்து கடற்கரைப் பகுதிகள் உச்சபட்ச கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக கடுமையான காற்று, மணல் புயல் மற்றும் கன மழை காரணமாக குஜராத் மாநிலத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அரபிக் கடலில் இருந்து நேராக குஜராத் நோக்கி நகர்ந்த வாயு புயலானது, கடற்கரையை நெருங்க நெருங்க மெல்ல மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. இதனால் நூலிழையில் குஜராத் தப்பியது.
ஆனாலும், குஜராத்துக்கு இதனால் பெரிய அளவில் சாதகம் இருக்காது என்றும், அடுத்த அறிவிப்பு மதியத்துக்கு பிறகு வெளியாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.