பஞ்சாப் மாநிலம், சங்ரூர் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அந்த மாநிலத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடி, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சங்ரூர் பகுதியில் 2 வயது ஆண்குழந்தை ஒன்று, சுமார் 120 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறுக்குள் கடந்த வியாழக்கிழமை விழுந்தது.
அக்குழந்தையை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மைத் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். ஆனால், சுமார் 110 மணி நேரத்துக்குப் பிறகு இறந்தநிலையிலேயே குழந்தை மீட்கப்பட்டது.
இதையடுத்து, மாநிலத்தில் திறந்த நிலையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தையும் மூடுமாறும், அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் காவல் துறைத் துணை ஆணையர்களுக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார்.