ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் வரும் ஜூலை 3 முதல் மேலும் 6 மாதங்களுக்கு அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும். அந்த மாநிலத்தில் 2018 ஜூன் 20 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான பிரகடனம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் அவர் கையெழுத்திட்டவுடன் அதிகாரப்பூர்வமாக குடியரசுத் தலைவர் ஆட்சி 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தடை செய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக ஏற்கெனவே அவசரச் சட்டம் அமலில் உள்ளது. அதற்கு மாற்றாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
இது தவிர ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்லிடப்பேசி இணைப்பு பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த முடியும். ஏற்கெனவே, ஆதார் அவசர சட்டம் அமலில் உள்ளது. அதற்கு மாற்றாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆதார் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.