பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 2,100 விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருந்த கடனை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் அடைத்திருப்பது நெகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.
இந்தத் தகவலை தனது வலைதளத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: பிகாரை சேர்ந்த விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருந்த கடனை அடைக்க உதவி செய்வதாக அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்து விட்டேன். வங்கிகளில் கடன் வாங்கியிருக்கும் விவசாயிகளில் 2,100 பேரை தேர்வு செய்து, அந்த கடனை அடைத்து விட்டேன்.
அதில் சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் சிலரின் கைகளில் தொகையை அளித்தேன். விவசாயிகளின் குழந்தைகளான ஸ்வேதா, அபிஷேக் ஆகியோரிடம் தொகையை அளித்தேன்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பலியான சிஆர்பிஎஃப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நான் வாக்குறுதி அளித்துள்ளேன்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில் அடுத்தக்கட்டமாக ஈடுபட்டு வருகிறேன்.
இதற்காக புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, உதவித் தொகையை நேரில் அளிக்க இருக்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 1,398 விவசாயிகள், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடனை அடைக்க அமிதாப் பச்சன் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.