மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் சுகாதாரத் துறை முடங்கும் அளவுக்கு நடந்து வரும் மருத்துவர்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்: மருத்துவர்கள் வலியுறுத்தல்


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுகாதாரத் துறை முடங்கும் அளவுக்கு நடந்து வரும் மருத்துவர்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் நேற்று மம்தா பானர்ஜி பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போதுதான் கடந்த 4 நாட்களாக நடைபெறும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளியின் உறவினர் தாக்கியதால் காயமடைந்த மருத்துவரை, மருத்துவமனைக்கு வந்து மம்தா பானர்ஜி பார்க்க வேண்டும். மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் அலுவலகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் முதல்வர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த பயிற்சி மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையை கவனித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் மூத்த மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏழை எளிய மக்கள்தான் அரசு மருத்துவமனைக்கு அதிகம் வருகிறார்கள். எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் மீது கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகள் எவ்விதப் பிரச்னையுமின்றி சுமுகமாகச் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாஜகவின் தூண்டுதலின்பேரில்தான் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com