ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளே காரணம் என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் புதன்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் பலியாகினர். பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் சடலங்களுக்கு, ஹம்ஹாமா பகுதியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சத்யபால் மாலிக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாநிலத்தில் எப்போதெல்லாம் அமைதியாக தேர்தலை நடத்த பாதுகாப்புப் படைகள் முயற்சிக்கிறார்களோ, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் எல்லைக்கு அப்பால் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உத்தரவிடுவார்கள். அதுபோல்தான், அனந்த்நாக்கில் புதன்கிழமையும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நமது தீர்மானத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
காங்கிரஸ் வலியுறுத்தல்: இதனிடையே, அனந்த்நாக் தாக்குதலை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசும், புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அனந்த்நாக் தாக்குதலில் 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகியிருப்பதும், 4 வீரர்கள் காயமடைந்திருப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்த நமது வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, மத்திய அரசும், புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.