ஐ.நா.வில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புக்கு எதிராக வாக்களித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான ஷாஹீத், ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்காக அனுமதி கோரியது. ஆனால், அந்த அமைப்பு ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துடன் வைத்துள்ள தொடர்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதற்கான வாக்கெடுப்பு கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அந்த அமைப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
ஜெருசலேம் விவகாரத்தில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஏற்கெனவே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா முதல் முறையாக வாக்களித்தது. இதற்கு முன்பாக, ஜெருசலேம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்த இந்தியா, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட தனி பாலஸ்தீன நாடு உருவாவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக, பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், தென் கொரியா, கனடா உள்ளிட்ட 28 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சீனா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, ரஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.
இதையடுத்து, அந்த அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.