விஜயவாடா: ஆந்திராவின் அனைத்து கடற்கரை மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடுமையான அனல் காற்று வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று ஆந்திராவின் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர மாவட்டங்களில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் மேல் வெப்பம் பதிவாகியிருந்தது.
இதில் பிரகாசம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.60 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. சுமார் 35 தானியங்கி வெப்பப் பதிவு மையங்களில் 44 - 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது.
இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும், ஆந்திராவின் கடற்கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் கடுமையான அனல் காற்று வீசும் என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் 45 மற்றும் 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வாளர் ராஜா ராவ் கூறுகையில், நிலத்தில் இருக்கும் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளது. இதனால், வெப்பம் சற்று அதிகரித்தாலும், மிக அதிகமான வெப்பத்தை மக்கள் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன் 18ம் தேதிக்குப் பிறகு தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, காற்று வீசினால்தான் இந்த வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.