கோவா எல்லையில் இறக்குமதி செய்யப்பட்ட மீன் ரகங்களை ஏற்றிச் சென்ற 33 சரக்கு லாரி மீன்கள் "பார்மலின்' ரசாயனச் தோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரச்சோதனையில், பார்மலின் மூலம் அந்த மீன்கள் பதப்படுத்தப்படவில்லை என்பது உறுதியானது. ஆனால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 5 சரக்கு லாரி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களை இணைக்கும் கோவா மாநில எல்லையில், சோதனைச்சாவடிகள் அமைந்துள்ள பத்ராதேவி மற்றும் பாலம் பகுதிகளில் சனிக்கிழமை இரவு தீவிர வாகனச்சோதனை நடைபெற்றது.
பத்ராதேவியில் நடைபெற்ற வாகனச்சோதனையில் 5 சரக்கு லாரிகளில் 3 லாரிகளும், பாலம் பகுதியில் 8 சரக்கு லாரிகளில் 2 லாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி மீன் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இந்த மீன்கள் "பார்மலின்' ரசாயனம் மூலம் பதப்படுத்தப்படவில்லை என்பது பின்னர் நடத்திய சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவா சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், சரக்கு லாரியில் இருந்து மீன்கள் பார்மலின் மூலம் பதப்படுத்தப்பட்டதா என்பது குறித்து, இந்திய தரக்கட்டுப்பாட்டு கவுன்சில் மூலமாகவும், மாநில உணவு தரக்கட்டுபாடு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை மூலமாகவும் சோதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் நடைபெற்ற வாகனச்சோதனையில், பார்மலின் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பார்மலின் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களை உண்ணுவதால், புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.