17-வது மக்களவையில் எம்பிக்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். எம்பிக்கள் பதவியேற்கத் தொடங்கியதில் இருந்தே வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என பாஜக எம்பிக்கள் கோஷம் எழுப்பி வந்தனர். தமிழக எம்பிக்கள் பதவியேற்ற போதும் இதுபோன்ற கோஷங்கள் ஒலித்தது.
இந்த வரிசையில், சமாஜ்வாதி எம்பி ஷபிகுர் ரஹ்மானும் இன்று பதவியேற்றார். அவர் தனது உறுதிமொழியை ஏற்ற பிறகு, "வந்தே மாதரம் பொறுத்தவரை அது இஸ்லாமுக்கு எதிரானது. அதை பின்பற்ற மாட்டோம்" என்றார். இதைத்தொடர்ந்தும், மக்களவையில் வந்தே மாதரம் என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
இதேபோல், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸியை, சபாநாயகர் பதவியேற்க அழைத்தபோது பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட கோஷங்கள் எழுந்தன. ஆனால், ஓவைஸியோ கோஷங்களை மேலும் எழுப்புங்கள் என்ற வகையில் கை அசைத்து ஆதரவு தெரிவித்து வந்து பதவியேற்றார். அவர் ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த் என்று கூறி தனது உறுதிமொழியை நிறைவு செய்தார்.