இந்தியா - சீனா இடையிலான உறவு மிகவும் பழைமை வாய்ந்தது என்று மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் கூறினார். மேலும், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் படைப்புகள் சீன மொழியில் இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்கு ஆசிய கல்விப்புல நிறுவனம் (ஐஎஸ்ஏஎஸ்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இந்தியா - சீனா கலாசார உறவுகள் எனும் தலைப்பில் தருண் விஜய் பேசியதாவது: இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பன்னெடுங்காலம் பழைமை வாய்ந்தது.
இந்தியாவில் இருந்து ஆன்மிகத் துறவிகள் குமாரஜீவா, போதிதர்மா, காஷ்யப், மாதங்கா, சோழப் பேரரசு ஆகியோர் மூலமும், சீனாவில் இருந்து சுவாங்சங், பாஹியான் மூலமும் இந்த உறவு தொடர்ந்து வருகிறது. இந்தத் துறவிகள் இரு நாடுகளுக்கும் இடையே கலாசார, நாகரிக உறவுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அவை இரு நாடுகளுக்குமான வலுவான உறவுத் தளத்தை அளித்துள்ளது. மாபெரும் சிந்தையாளர், தத்துவமேதையான திருவள்ளுவரின் பணிகள் அளப்பரிவை. அவரது படைப்புகள் மற்றும் அவரது வாழ்க்கைச் செய்தி ஆகியவை சீன மாணவர்கள், பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வது அவசியமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் ஐஎஸ்ஏஎஸ் நிர்வாக இயக்குநர் லி டாவோ, தெற்கு ஆசியக் கல்வி மையத்தின் இயக்குநர் லியூ ஜியா வீ ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மூத்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இத்தகவல் தருண் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.