புது தில்லி: பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து வரும் இந்திய ரயில்வே, தற்போது சில வழித்தடங்களில் மட்டும் தனியார் நிறுவனங்களால் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
சுற்றுலாத் தலங்கள் மற்றும் குறைவான பயணிகளைக் கொண்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் அடுத்த 100 நாட்களுக்கு ரயில்களை இயக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதற்காக தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் ஏலத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. இதன் அடிப்படையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும், தனியார் நிறுவனங்களின் மூலம் பயணிகள் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல, எரிவாயு உருளையைப் போல தற்போது நாம் பயணிக்கும் மானியத்துடன் கூடிய ரயில் டிக்கெட்டுகளில், பொதுமக்கள் மானியத்தை விட்டுத் தருமாறு கோரிக்கை வைக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.