மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க எம்.பி.யுமான அதீர் ரஞ்சன் செளதரி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையின் காங்கிரஸ் தலைமைக் கொறடாவாக கேரள எம்.பி.கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் கட்சியின் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதீர் ரஞ்சன், கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மக்களவைக் காங்கிரஸ் கட்சித் தலைவராக அதீர் ரஞ்சனும், தலைமைக் கொறடாவாக சுரேஷும் நியமிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அதீர் ரஞ்சன் கூறுகையில், மிகவும் மதிப்புடைய பதவியை எனக்கு கட்சி அளித்துள்ளது. கட்சியின் கடைநிலை தொண்டனான என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை அளித்ததற்கு கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண மக்களின் பிரச்னையை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றார். மேற்கு வங்கத்தில் பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை செளதரி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2012-2014 வரை ரயில்வே துறை இணையமைச்சராக பதவி வகித்த இவர், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.