உணவுப் பாத்திரத்தை கழுவுவது தொடர்பாக ஏர் இந்தியா விமானிக்கும், விமான பணிக்குழு ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் எதிரொலியாக, இனி விமானங்களில் உணவு எடுத்து வர ஏர் இந்தியா விமானிகளுக்கு தடைவிதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெங்களூரிலிருந்து கொல்கத்தாவுக்கு கடந்த திங்கள்கிழமை காலை 11.40 மணியளவில் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கும், விமானப் பணிக்குழு ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தான் உணவு கொண்டு வந்த பாத்திரத்தை கழுவுமாறு, ஊழியரிடம் விமானி கூறியதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.
இந்த சம்பவத்தை, ஏர் இந்தியா நிர்வாகம் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பிறகு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விமானங்களில் உணவு எடுத்து வர வேண்டாம் என்று விமானிகளுக்கு விரைவில் அறிவுறுத்தப்படும் என்றார் அந்த அதிகாரி.