அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவுவதால், ஈரான் வான்வழியில் இந்திய விமானங்கள் செல்லாது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவர் மீண்டும் விதித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பல சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை ஈரான் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியது.
இதனால், ஈரான் வான்வழியில் பயணிக்கும் பயணிகள் விமானம் தவறுதலாக குறிவைக்கப்படலாம். எனவே, மறு உத்தரவு வரும் வரை ஈரான் வான்வழியில் விமானங்கள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் அந்நாட்டு விமானிகளுக்கு வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்தது. இதன் விளைவாக, உலகம் முழுக்க முக்கியமான விமான நிறுவனங்கள், தங்களது பயணப் பாதையை மாற்றியது.
இந்த வரிசையில், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இந்திய விமானங்களும் ஈரான் பிராந்திய வான்வழியாக செல்வதை தவிர்ப்பதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.