தில்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருபவர் மிதாலி சந்தோலா. நேற்றிரவு இரவு கிழக்கு தில்லியில் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென மிதாலி காரின் மீது முட்டையை வீசியுள்ளனர்.
உடனே அவர் தனது காரை நிறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைகொண்டு மிதாலியை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளனர். இதில் ஒரு குண்டு மிதாலியின் வலது கையில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மிதாலி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.