கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 3 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து நக்வி கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் கல்வி பயின்றுவரும் 3 கோடியே 14 லட்சத்து 39 ஆயிரத்து 466 சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதில் 2 கோடியே 40 லட்சத்து 72 ஆயிரத்து 287 பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது அந்த சமூகத்தினரின் மொத்த மக்கள் தொகையில் 13.98 சதவீதமாகும். அதே காலகட்டத்தில் 36 லட்சத்து 84 ஆயிரத்து 636 கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, அவர்களது மக்கள் தொகையில் 13.24 சதவீதமாகும்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 25 லட்சத்து 17 ஆயிரத்து 167 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை அந்த சமூகத்தினரின் மக்கள் தொகையில் 12.08 சதவீதமாகும். பெளத்த மதத்தைச் சேர்ந்த 7 லட்சத்து 82 ஆயிரத்து 139 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலுள்ள அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தொகையில் 9.26 சதவீதமாகும். இதேபோல் ஜெயின் மாணவர்கள் 3 லட்சத்து 79 ஆயிரத்து 444 பேருக்கும், பார்சி மாணவர்கள் 3 ஆயிரத்து 793 பேருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அந்த சமூகத்தினரின் மக்கள் தொகையில் முறையே 8.52 மற்றும் 6.62 சதவீதமாகும்.
நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 17 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 158 பேரும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 78 லட்சத்து 19 ஆயிரத்து 588 பேரும் உள்ளனர். மேலும், சீக்கிய சமூகத்தினர் 2 கோடியே 8 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேரும், பெளத்த மதத்தினர் 85 லட்சத்து 42 ஆயிரத்து 972 பேரும், ஜெயின் சமூகத்தினர் 44 லட்சத்து 51ஆயிரத்து 753 பேரும், பார்சி சமூகத்தினர் 57 ஆயிரத்து 264 பேரும் உள்ளனர் என்று முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.