கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
கலபுர்கியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெகெளடா அண்மையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்குப் பதில் கூற விரும்பவில்லை. காங்கிரஸ், மஜத கட்சிகளின் பரஸ்பர ஒப்புதலுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைப் பிடித்தது. இதற்கு இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததை மறுக்க முடியாது.
இரு கட்சியினரும் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆனால் ஒரு சிலர், கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படாமல் செயல்படுவது வேதனை அளிக்கிறது. இதனை கட்சியின் மேலிட கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இரு கட்சிகளிலும் ஒன்றிணைந்து கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நேரத்தில், கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் எனக் கூறுவது முறையல்ல என்றார்.