தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத தண்ணீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-ஆவது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தில்லி சேவா பவனில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் மற்றும் கேரளம், புதுச்சேரி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அப்போது ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை இம்மாத இறுதிக்குள் திறக்க உத்தரவிட வேண்டும். நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும். காவிரி படுகையில் கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு ஆணையம் அனுமதி தரக்கூடாது என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் காவிரியில் நீர் வரத்து மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.