பொதுக் கணக்குகள் குழு, மதிப்பீட்டுக் குழு உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களை அமைக்கும் பணியை மத்திய அரசு திங்கள்கிழமை தொடங்கியது.
இதுதொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பல்வேறு தீர்மானங்களை மக்களவையில் திங்கள்கிழமை கொண்டுவந்தார். அதில், நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு தொடர்பான தீர்மானத்தில், மக்களவையிலிருந்து 30 உறுப்பினர்கள் அந்தக் குழுவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு தீர்மானத்தில், பொதுக் கணக்குகள் குழுவுக்காக மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 7 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதேபோல், பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
அதில், பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 7 உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு மக்களவையில் இருந்து 20 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினர்களும் நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு அமைப்பது தொடர்பாக தனியே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், மக்களவையில் இருந்து 20 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினர்களும் அந்தக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.