அமராவதி: முந்தைய ஆட்சிக்காலத்தில் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் ரூ. 2636 கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சிக்காலத்தில் சூரிய மற்றும் காற்றாலை மின்சார கொள்முதல் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களின் காரணமாக, அரசுக்கு ரூ. 2636 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையினை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால் முதல்வர், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் துறைசார்ந்த மூத்த அதிகாரிகள அனைவரின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்திரபாபு தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை துணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு ஊழல் எதிர்ப்பு ஆணையம், குற்ற விசாரணைத் துறை மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை உதவும்.
அதேசமயம் சூரிய மற்றும் காற்றாலை மின்சார நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.