பாரத மாதா ஜன்ஹித் அமைப்பின் தலைவர் சுவாமி சத்யமித்ரானந்த் கிரி மகாராஜ் (87) செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆச்சார்ய மகாமண்டலேஸ்வர் சுவாமி அவதேஷானந்த் கிரி மகாராஜ் கூறியதாவது:
கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சுவாமி சத்யமித்ரானந்த் கிரி மகாராஜ், உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவர் காலமானார். ஹரித்துவார் பகுதியிலுள்ள ராகவ் குடில் பகுதியில் புதன்கிழமை அவர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
சுவாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சுவாமி சத்யமித்ரானந்த் கிரி மகாராஜின் மறைவு மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு சேவை அமைப்புகளை அமைத்து ஏழை மக்களுக்குத் தொண்டாற்றியதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். மலைவாழ் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இலவச கல்வி அளித்தும், இலவச மருத்துவ வசதிகள் அளித்தும் அவர் தொண்டாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை மக்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும், கடைநிலை மக்களுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுவாமி சத்யமித்ரானந்த் கிரி மகாராஜ். இந்தியாவின் பழம்பெரும் வரலாறு குறித்தும், கலாசாரம் குறித்தும் அவர் எப்போதும் பெருமை கொள்வார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.