மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் காங்கிரஸ் பாடம் கற்கவில்லை என கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின் போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை கருப்பு தினமாக அனுசரிக்கும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எடியூரப்பா பேசியது:காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரப்போக்கு மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் தொடர்கிறது.
தோல்விக்குப் பிறகும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பது வேதனைக்குரியது. காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையால் அக்கட்சி தேசிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை மக்கள் வழங்கவில்லை. வரும்காலங்களிலும் அக்கட்சியின் நிலைமை படுமோசமாகும்.
அவசரநிலை பிரகடனத்தின் போது முதலில் என்னை சாகர் சிறையிலும், பின்னர் பெல்லாரி சிறையில் அடைத்தனர். அவசரநிலை பிரகடனத்தின் போது ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் பெரும் கொடுமைக்கு ஆளானார்கள் என்றார்.