மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த தயார்: ஆன்டிகுவா பிரதமர்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை, தங்களது நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த தயாராக
மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த தயார்: ஆன்டிகுவா பிரதமர்


பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை, தங்களது நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த தயாராக இருப்பதாக ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரௌன் தெரிவித்துள்ளார்.
ஆன்டிகுவாவில் அவருக்குள்ள சட்ட ரீதியிலான வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்ததும் அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று கேஸ்டன் பிரௌன் கூறியுள்ளார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா-பார்பியுடாவில் கடந்த 2017-ஆம் ஆண்டில் முதலீட்டு திட்டத்தின் மூலம் குடியுரிமை பெற்றவரான மெஹுல் சோக்ஸி (60), கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவிலிருந்து தப்பி அந்நாட்டில் தஞ்சமடைந்துவிட்டார். 
நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி கடன் மோசடி: நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அம்பலமானது. 
பல நாடுகளில் வைர உற்பத்தி நிறுவனங்கள், வைர விற்பனைக் கடைகளை நடத்தி வந்த நீரவ் மோடி,  அவரது உறவினரும் கீதாஞ்சலி குழும தலைவருமான மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதக் கடிதங்களைப் பெற்று, அவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிக் கிளைகளிடம் கொடுத்து சுமார் ரூ13,400 கோடி வரை கடன் பெற்றனர். இந்த உத்தரவாதக் கடிதங்களை வழங்கியதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பதிவேடுகளில் எந்த அலுவலகக் குறிப்பும் இல்லை. மேலும், அங்குள்ள கணினி சேமிப்பு மையத்திலும் அந்த விவரங்கள் இடம் பெறவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
எனினும், இந்த மோசடி அம்பலமாவதற்கு முன்னரே நீரவ் மோடி, சோக்ஸி உள்ளிட்டோர் இந்தியாவிலிருந்து தப்பிவிட்டனர். இதில் மெஹுல் சோக்ஸி கடந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி தப்பியது தெரியவந்தது
மத்திய அரசு நடவடிக்கை: இதைத் தொடர்ந்து, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. ரூ.13,400 கோடி கடன் மோசடியில் மெஹுல் சோக்ஸி மோசடி செய்த தொகை ரூ.7,080 கோடி என்று விசாரணை அமைப்புகள் தெரிவித்தன. பிரிட்டனுக்கு தப்பிய நீரவ் மோடியையும், ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியையும் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பிரிட்டனில் நாடுகடத்தல் வழக்கை எதிர்கொண்டுள்ள நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பத் தயார்: இதனிடையே, மெஹுல் சோக்ஸி தொடர்புடைய வழக்கின் விசாரணை, மும்பை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, மருத்துவ சிகிச்சைக்காகவே இந்தியாவிலிருந்து தாம் வெளியேறியதாகவும், உடல் நிலை சரியானதும் விசாரணைக்காக இந்தியாவுக்கு திரும்புவேன் என்றும் சோக்ஸி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பத் தயாராக இருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்டிகுவா பிரதமர் தகவல்: இந்நிலையில், மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்த தயாராக உள்ளதாக ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரௌன் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில், நிதி மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாருக்கும் நாங்கள் புகலிடம் அளிக்கமாட்டோம். எனினும், குற்றவாளிகளுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன. அந்த வகையில் சோக்ஸிக்கும் நீதிமன்றத்தை நாடுவதற்கு உரிமை உள்ளது. அவருக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்ததும், அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்பதை இந்திய அரசிடம் உறுதிபட தெரிவித்துள்ளோம் என்று பிரதமர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், சோக்ஸியை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பாக ஆன்டிகுவா-பார்பியுடா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம் என்று தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com