மத்திய அரசுத் துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு 6,955 காலியிடங்கள்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு (பழங்குடியினர்) ஒதுக்கப்பட்டுள்ள 6,955 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு (பழங்குடியினர்) ஒதுக்கப்பட்டுள்ள 6,955 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசின்வசம் இல்லை. அந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகளை சம்பந்தப்பட்ட வாரியங்கள் நடத்திவருவதால், அந்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை.
இருந்தபோதிலும், மத்திய அரசின் 90 சதவீத பணியாளர்களைக் கொண்ட 10 அமைச்சகங்களிலும், துறைகளிலும் ஒவ்வோர் ஆண்டும் நிரப்பப்படும் பணியிடங்களை மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. அந்த அமைச்சகங்களும், துறைகளும் அளித்த தகவலின்படி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 22,829 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. 
அதில் 15,874 இடங்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிரப்பப்பட்டன. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 6,955 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com