இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பிடிபட்ட மர்ம நபர்
இந்திய- பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த 21 வயது இளைஞரை எல்லை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த முகமது ஷாரூக் என்பதும், அவரிடம் இருந்து செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டு, அதில் இருந்த சந்தேகத்துக்குரிய தொலைபேசி எண்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அந்த நபர், அப்பகுதியில் மோட்டார் வாகனத்தில் சென்று போர்வைகளை விற்பனை செய்பவர் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நபர் ஆதார் அட்டையும் வைத்திருந்தார். விசாரணையில் அவர் தெரிவித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதையடுத்து அவரை கைது செய்த எல்லை பாதுகாப்புப்படையினர், அப்பகுதி போலீஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
பிடிபட்ட அந்த நபர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரா என்பது குறித்தும், எல்லைப்பகுதியில் உளவு பார்க்கும் எண்ணத்தில் சுற்றித்திரிந்தாரா என்பது குறித்தும் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.