மராத்தா பிரிவினருக்கு தனி இடஒதுக்கீட்டை உருவாக்கும் மஹாராஷ்டிரா அரசின் முடிவு குறித்து அந்த மாநில அரசிடம் மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
மராத்தா பிரிவினருக்கு சமூகத்திலும் மற்றும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பிரிவினர் (எஸ்இபிசி) என்ற வகையில் இடஒதுக்கீட்டை வழங்க மஹாராஷ்டிரா அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்ஜித் மோர் மற்றும் பார்தி டாங்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, மராத்தா பிரிவினர் இடஒதுக்கீடு தொடர்பாக மஹாராஷ்டிரா அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதன்படி, மராத்தா பிரிவினர் ஏன் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (ஓபிசி) சேர்க்கப்படவில்லை. அரசின் கூற்றுப்படி, எஸ்இபிசி பிரிவும் மற்றும் ஓபிசி பிரிவும் சமமானது என்றால் பிறகு எதற்கு இடஒதுக்கீட்டுக்காக அரசு தனிப் பிரிவை உருவாக்க வேண்டும்?.
மாநில அரசு மராத்தா பிரிவினரை ஓபிசி பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கலாமே. பிறகு எதற்கு இந்த பாகுபாடு? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி மஹாராஷ்டிரா அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கோரியுள்ளனர்.