திவால் சட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டில் அமல்படுத்தியதன் காரணமாக ரூ.2 லட்சம் கோடி வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திவால் சட்ட விதிகள் தொடர்பாக, 3 நாள் நடைபெறும் சர்வதேச மாநாடு, ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அந்த மாநாட்டில், மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் இன்ஜேதி ஸ்ரீநிவாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
திவால் சட்ட விதிகளை அமல்படுத்தியதற்கு பிறகு, புதிய வாராக்கடன் அளவு குறைந்திருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியின் தரவுகளில் இருந்து அறியமுடியகிறது. ஆகவே, ஒட்டுமொத்த வாராக்கடன் அளவும் குறைந்திருக்கிறது.
திவால் நிலையை எட்டிய ஒவ்வொருவரும், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் தீர்வுகளைக் கண்டு வருகின்றனர். சுமார், 9 விவகாரங்களுக்கு அந்தத் தீர்ப்பாயத்துக்கு வெளியே தீர்வு காணப்பட்டிருக்கிறது. தொழிலை நஷ்டமாக்குவதில் சில தொழிலதிபர்கள் இதற்கு முன்பு வேண்டுமென்றே ஆர்வம் காட்டினர். அதனால், தொழில்துறையினருக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படவில்லை. இந்நிலையில், தொழில்துறையினரிடையே போட்டியை ஏற்படுத்துவதாக திவால் சட்ட விதிகள் அமைந்தன.
இந்த விதிகள் அமலாவதற்கு முன்பு, நலிவடையும் நிறுவனங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு 4 ஆண்டுகள் வரை தேவைப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது என்றார் அவர்.