காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண்பவரே அமைதிக்கான நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவர் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவுடனான போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசை இம்ரான் கானுக்கு வழங்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காஷ்மீர் பிரச்னையில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை குறிப்பிட்டு இம்ரான்கான் வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில் கூறியிருப்பதாவது: அமைதிக்கான நோபல் பரிசு பெற எனக்கு தகுதியிருப்பதாக நான் கருதவில்லை. காஷ்மீர் மக்களின் வாழ்த்துகளுடன், அவர்களது அமைதி மற்றும் மனித வள மேம்பாட்டிற்கு இந்த துணைக்கண்டத்தில் யார் பாடுபடுகிறார்களோ அவரே நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவர் என்று தெரிவித்துள்ளார்.
விரோதம் பாராட்டாமல் இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவித்ததற்காக கடந்த 2-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையான தேசிய சபையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைப் பொறுப்புணர்வோடு, சிறப்பான முறையில் கையாண்டமைக்காக இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் பகுதியிலுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை காஷ்மீரில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை விரட்டியடிக்கும் முயற்சியில், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, மிக்-21 போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்திய இந்திய விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.
அபிநந்தனை அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி இம்ரான் கான் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்க வலியுறுத்தி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்ரான்கானின் சுட்டுரைப் பதிவை, அவரது கட்சியான தாரிக்-ஏ-இன்சாப் கட்சியினர் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர்.