துப்ரி : அஸ்ஸாம் மாநிலம் துப்ரியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாலாகோட் தாக்குதல் குறித்து பேசினார்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பாலாகோட்டில் பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாஜகவினர் கூறி வந்தனர்.
இது தொடர்பாக பல்வேறு தரப்பில் கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்ட நிலையில், இது குறித்து ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், பாலாகோட் தாக்குதல் நடந்த இடத்தில் 300 செல்போன்கள் இயங்கி வந்ததை என்டிஆர்ஓ உறுதி செய்துள்ளது. அப்படியானால், அங்கிருந்த மரங்கள் தான் 300 செல்போனையும் பயன்படுத்தியிருக்குமா என்ன? தற்போது என்டிஆர்ஓ எனும் அதிகாரப்பூர்வ அமைப்பையும் நம்ப மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
உண்மையிலேயே பாலாகோட்டில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் சென்று தாக்குதல் நடந்த இடத்தில் எத்தனை உடல்கள் இருக்கிறது என்பதை எண்ணிக் கொண்டுதான் வர வேண்டும் என்றும் ராஜ்நாத் கூறியுள்ளார்.
முன்னதாக, தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த இந்திய விமானப் படை தளபதி தனோவா, தாக்குதல் நடந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள், எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கணக்கிட முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.