அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் யாத்திரை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி 46 நாட்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வது வழக்கம். மலைப்பாதைகளில் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தை பக்தர்கள் விரும்பி மேற்கொள்கின்றனர். யாத்ரீகர்கள் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பகல்காம், கந்தர்பால் மாவட்டத்திலுள்ள பால்டால் ஆகிய இரு பாதைகள் வழியாக யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்ற 36-வது கூட்டத்தின் முடிவில், நிகழாண்டுக்கான யாத்திரை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 46 நாட்கள் யாத்திரை நடைபெறவுள்ளதாக ஜம்முவின் ராஜ்பவன் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்த யாத்திரையை சீர்குலைக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் ஈடுபடுவதால், இந்த யாத்திரையில் பக்தர்களுக்கு பயங்கர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.