அயோத்தி விவகாரத்தில் சுமூக தீர்வு கண்டு சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்போம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று (வெள்ளிக்கிழமை) மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண பரிந்துரை செய்தது. அதற்கான குழுவில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்குரைஞரும், நடுநிலையாளராகவும் திகழும் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இதுதொடர்பாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது டிவிட்டர் பதிவில், "அனைவருக்கும் மதிப்பளித்து, நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்போம். அனைவரும் அதற்கான இலக்கை நோக்கி பயணித்து கனவை நனவாக்கி சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்போம்" என்றார்.