ஜம்மு பேருந்து நிலையத்தில் பயங்கரவாதிகள் நேற்று நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ஜம்மு பேருந்து நிலையத்தில் இதோடு 3-ஆவது முறையாக கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு நகரின் பி.சி. சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக யாசின் ஜாவீத் பட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் குல்காம் மாவட்ட தளபதியுடன் தொடர்பில் இருப்பவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு யாசின் ஜாவீத் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயங்கரவாதிகள் நேற்று நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மருத்துனமவையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.